நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை :  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். நீலகிரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து சராசரி நிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸும்  ஒட்டி இருக்கும்.

Related Stories: