லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து தொழிலதிபர் மல்லையா தொடர்ந்த மேல்முறையீடு மனுவை அடுத்தாண்டு பிப்ரவரி 11ம் தேதி விசாரிப்பதாக லண்டன் உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மல்லையாவை நாடு கடத்துவதில் எந்த தடையும் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கக் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இதையடுத்து, மல்லையா தரப்பில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.