வாஷிங்டன்: ‘ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள், அதன் உபகரணங்களை எந்த நாடு வாங்கினாலும் அமெரிக்கா எதிர்க்கும்,’ என பென்டகன் எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளையும், அது சார்ந்த பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம், கடந்தாண்டு அக்டோபரில் கையெழுத்தானது. இதற்கிடையே, ரஷ்யாவுடன் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டி வருகிறது. அதையும் மீறி ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியாவின் இந்த முடிவு குறித்து, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணை செயலாளர் டேவிட் டிராச்டன்பெர்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தியா உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு பலமாக உள்ளது.