புதுடெல்லி: பணப் பரிமாற்ற முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்வதற்கு அமலாக்கத் துறைக்கு தடை விதிக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ராபர்ட் வதேரா வாபஸ் பெற்றார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கி இருப்பதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது, நிதி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. வதேராவின், ‘ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலட்டி எல்எல்பி’ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அரோரா, இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று, ராபர்ட் வதேரா பலமுறை விசாரணைக்கு ஆஜராகி பதிலளித்து வருகிறார். தன் மீது அரசியல் உள்நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி வரும் அவர், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என அமலாக்கத் துறைக்கு தடை விதிக்கும்படி கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.