×

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

பெங்களூரு: பாஜகவினரின் கோரிக்கையை தொடர்ந்து, கர்நாடக சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ்- பாஜக உறுப்பினர்கள் அமளியால் கர்நாடக சட்டப்பேரவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந் பாட்டிலை பாஜக.வினர் கடத்தி சென்றதாக அமைச்சர் சிவக்குமார் பேசியதால் அவையில் அமளியானது.  கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தனர்.

மேலும் அவர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில், ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. இருப்பினும், நியாயமான காலவரையறைக்குள் 15 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும்  இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியது. இதையடுத்து இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், கலந்து கொள்ளப் போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏ.க்க ளும் அறிவித்து விட்டனர்.

சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம்:

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடியது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் காரசாரமாக பேசினார். இன்றைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையா நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்.எல்.ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கொறடா உத்தரவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் கட்சித்தாவல் சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.

எம்எல்ஏ-க்கள் அமளியால் அவை ஒத்திவைப்பு:

மேலும் தங்கள் எம்.எல்.ஏ-க்களை பாஜக கடத்தி விட்டதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நேற்றுவரை எங்களுடன் இருந்த எம்.எல்.ஏ ஸ்ரீமத் பாட்டீல் தற்போது மும்பையில் உள்ளார். அவரை பாஜக கடத்திவிட்டது எனக்கூறி எம்.எல்.ஏ-வின் புகைப்படங்களை காட்டி அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பாஜக மோதலையடுத்து அவை அரைமணிநேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக ஆளுநருடன் பாஜகவினர் சந்திப்பு:

இந்த நிலையில், கர்நாடக ஆளுநரை பாஜகவினர் சந்தித்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பாரதீய ஜனதா கட்சி முறையயீட்டை அடுத்து ஆளுநரின் சிறப்பு அதிகாரி சபாநாயகரை சந்தித்து பேச முடிவெடுக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் பாஜக தலைவர்கள் தொலைபேசியில் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் உத்தரவு:

இந்த நிலையில், பாஜகவினரின் கோரிக்கையை அடுத்து, கர்நாடக சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சிறப்பு அதிகாரி மூலம் சபாநாயகருக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளார். ஆளுநர் அனுப்பிய அறிவுறுத்தலை சபாநாயகர் சட்டப்பேரவையில் படித்துக்காட்டினார். இந்த நிலையில் சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் அனுப்பியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Tags : Karnataka Legislative Assembly, Referendum, Governor
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்