விழுப்புரம் அருகே கணவனை கொன்று விபத்து போல் சித்தரித்து நாடகமாடிய மனைவி கைது: போலீசார் விசாரணை

விழுப்புரம்: சின்னசேலம் அருகே சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை மனைவியே தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி பகுதி அருகே கார் ஒன்றில் டயர் எரிந்துக் கொண்டிருப்பதாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயை அனைத்தனர். மேலும் காரின் கதவை திறந்து பார்த்த போது சாக்குமூட்டையில் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த விசாரணையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி - யில் ஊழியராக பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டதும் அவரது சடலத்தை காரில் எடுத்து வந்து எரிக்க வந்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து செம்பாக்குறிச்சி வனப்பகுதி அருகே காரை நிறுத்தி விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விபத்து போல் சித்தரிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பழனிவேலின் சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில் பழனிவேலுவை அவரது மனைவி மஞ்சுளா தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மஞ்சுளாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. இதை அடுத்து பழனிவேலுக்கும், மஞ்சுளாவிற்கும் திருமணமாகி 2 மகள்கள், 1 மகனும் உள்ள நிலையில் பழனிவேல் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எனவே மஞ்சுளா அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். மேலும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் கணவர் தமக்கு ஆடம்பர செலவு செய்யாமல் பிறருக்கு கடன் கொடுத்ததால் மஞ்சுளா ஆத்திரத்தில் இருந்துள்ளார். எனவே தனது தம்பி ராமலிங்கம் என்பவருடன் சேர்ந்து பழனிவேலை கொலை செய்த மஞ்சுளா அவரது சடலத்தையும் காரில் வைத்து எரிக்க முயன்றுள்ளார். மேலும் இவை அனைத்தையும் மஞ்சுளா காவல்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது மஞ்சுளாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரது தம்பி ராமலிங்கத்தை தேடி வருகின்றனர்.

Related Stories: