புதுச்சேரியில் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: மனு அளித்த உடனேயே முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் ஐடிஐ தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.  புதுச்சேரியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலர், அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு தொகுதியாக இன்று சென்றனர்.  இதற்காக மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் மக்கள் குரல் என்ற குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கபட்டது.

இதில் இன்று காலை நெட்டப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர். அப்போது பல்வேறு துறைகளின் சார்பில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா பெயர் மாற்றம், குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைத்தனர்.

மேலும் முகாமில் முதல்வரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ஐடிஐ தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்ற முதல்வர் நாராயணசாமி, மேடையிலேயே 2500 ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள். இது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படும். அடுத்ததாக காரைக்கால், மாகி, ஏனாம் மற்றும் கிராமப்புற தொகுதிகளில் மக்கள் குறை தீர்வு முகாம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

Related Stories: