சென்னை: தமிழகத்தில் கல்வி வளர்ச்சி 46 சதவீதமாக உள்ளது, இது நாட்டின் மொத்த கல்வி வளர்ச்சி சதவீதத்தை விட அதிகமானது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், யுனிசெஃப் மற்றும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை சார்பில்,தரமான மற்றும் நிலைத்த கல்வி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அப்போது, இந்தியப் பள்ளிகளில் 80 சதவீதம் அரசு பள்ளிகளாகவே உள்ளன என்றும், அரசு பள்ளிகள் இந்திய அளவில் கல்வியில் பெரும் பங்களிக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும் மதிய உணவு திட்டம் போன்றவை மாணவர்களை கல்விசாலைகள் நோக்கி வரவழைக்க காரணமாக அமைந்தது எனவும் ஆளுநர் தெரிவித்தார். தேனி மாவட்டத்தை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்று பயணம் செய்துவிட்டதாகக் கூறிய ஆளுநர், விரைவில் தேனி மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தெரிவித்தார்.