கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.2 கோடி நிதியுதவி

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், காசிரங்கா பூங்காவை சீரமைக்கும் பணிக்கும் 2 கோடி ரூபாய் நிதியுதவியை நடிகர் அக்ஷய் குமார் வழங்கி உள்ளார். வட மாநிலங்களில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் பீகார், அசாம், திரிபுரா, மேற்குவங்கம் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் சுமார் 52 லட்சம் பேர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில் ஏரளமான வனவிலங்குகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமான சாலைகள், பாலங்கள், கரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அசாம் அரசுக்கு 251 கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். அசாம் முதலமைச்சர் சரபானந்தா சோனோவாலிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தி நடிகர் அக்ஷய் குமார், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அசாம் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், காசிரங்கா பூங்காவுக்காக ஒரு கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கி உள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: