டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதன் முறையாக தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள 100 தீர்ப்புகளில் முதற்கட்டமாக 2 தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை உலக நாடுகளின் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்திலோ அல்லது அந்நாட்டின் தேசிய மொழியிலேயே வெளியிடப்படும். இதனை மாற்றி முதன்முறையாக இந்திய நீதிமன்றத்தில் 6 மொழிகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னனதாக வழக்கு முடிந்து ஆங்கிலத்தில் தீர்ப்பு பதிவேற்றப்படும் அதே நேரத்தில் ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமி, ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள உச்சநீதிமன்றம், ‘அதிகமான மேல்முறையீடு வழக்குகள் வரும் மொழிகளை மட்டும் தற்போது தேர்ந்தெடுத்துள்ளோம். மற்ற மொழிகளையும் சேர்க்க விரைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பதிவேற்றத்தில் தமிழ் இடம் பெறாததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் கட்டிடம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது கன்னடம், அசாமீஸ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி பாப்டே அவரிடம் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசனத்துக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தலை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். நேற்று வெளியிடப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இடம் பெறவில்லை. இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று 113 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விபரங்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 113 வழக்குகளின் தீர்ப்பு பட்டியலில் 98 மற்றும் 99 இடங்களில் தமிழக வழக்கின் தீர்ப்பு, தமிழிலில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடப்பட்டுள்ள வழக்குகள்; * சரவண பவன் உரிமையாளர் ராஜபாலன், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது மார்ச் 29 ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவு * நீலகிரியை சேர்ந்த ஜோசப் ஈஸ்வரன் வாப்ஷேரின் சொத்துக்கள் தொடர்பாக அவரது வாரிகள் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு