மீன்களே வாழ தகுதியில்லாத வைகை நீரை எப்படி குடிப்பது? சமூக ஆர்வலர்கள் கேள்வி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தண்ணீரில் மீன்களே வாழ வழியில்லாத போது, பொதுமக்கள் எப்படி இந்த நீரை குடிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர். ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, அரசரடி சுருளிமலை, வருசநாடுமலை, சதுரகிரி மலை ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர் வரத்து ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு எதிர்பார்த்த கோடை மழையும், பருவமழையும் பொய்த்து போனதால் வைகை ஆறும், பெரியாறும் வறண்டது. இதனால் அணைப்பகுதிக்கு நீர்வரத்து தடைபட்டது. ஆனால் தேனி மாவட்டத்தின் சில பகுதியில் உள்ள மனிதக் கழிவு உட்பட சாக்கடை நீர் முல்லையாற்றில் பெருக்கெடுத்து அணையின் நீர் தேக்கப்பகுதிக்கு வந்தடைகிறது. இதனால் அணையில் உள்ள தண்ணீரின் தன்மை மாறி, கடினத்தன்மை நீராக உள்ளதாலும், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டத்தில், மூன்றில் ஒரு பங்கிற்கு நீர் மட்டம் 27.79 அடியாக குறைந்து சேறும், சகதியாக இருப்பதால், மீன்கள் சுவாசிப்பதற்கு போதிய ஆக்ஸிஜன் காற்று கிடைக்காததால் அவை இறந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீன்களே வாழ முடியாத வைகையின் தண்ணீரை பொதுமக்கள் எப்படி குடிப்பார்கள்? இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து சேறும், சகதியும் வண்டல் படிந்து உள்ளது. மேலும் மனிதக் கழிவுகளுடன் கூடிய சாக்கடை நீர்தேக்கப் பகுதிக்கு வந்து சேருவதால் நீரின் தன்மை மாறுகிறது. இதனால் மீன்கள் சுவாசிக்க தேவையான காற்று இல்லாததால் செத்து மடிகிறது. மீன்களே வாழ முடியாத இந்த தண்ணீரை தான் பொதுமக்கள் குடித்து வருகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் சூழல் நிலவி வருகிறது. அத்துடன் பொதுமக்களே குடிப்பதற்கு தண்ணீர் இல்லாதபோது நீர்தேக்கப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருடி வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: