காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். 18-ம் நாள் வைபவத்தில் செண்பக பூ அலங்காரத்தில் உள்ள அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப்புகழ் பெற்றது வரதராஜப் பெருமாள் கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஜூலை 25ம் தேதிமுதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்திலும் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 17 நாட்களில் மொத்தம் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
17 ஆம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டுடுத்தி பக்தர்களுக்கு தரிசனம் அளித்த நிலையில் 18-ம் நாளான இன்று கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். 18-ம் நாள் வைபவத்தில் செண்பக பூ அலங்காரத்தில் உள்ள அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு;
நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி பெரும்பாலான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவிலுக்கு வராத நிலையில், இன்று அதிகாலையில் பக்தர்கள் குவிந்தததால் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திம்மபேட்டை- வாலாஜாபாத்-காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் ஸ்தாபித்து நிற்கின்றது. வாலாஜாபாத்-காஞ்சிபுரம் பாதையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.