புதுடெல்லி: பயணிகள் ரயில் கட்டணத்தை குறைக்கும் அதிகாரத்தை அளித்தால், சரக்கு கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார். இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் ரயில் கனெக்ட் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் பேசியதாவது: வணிக ரீதியாக பார்த்தோமானால், பயணிகள் பிரிவில் நமக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது சரக்கு ரயில் போக்குவரத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. சரக்கு ரயில் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமாகவே, பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, பயணிகள் ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதில் சுதந்திரம் அளித்தால், சரக்கு ரயில் கட்டணம் நிச்சயமாக குறையும் என நான் உறுதியாக கூறுகிறேன்.