சென்னை: தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி, மக்களை வாட்டி வதைத்தது. கத்திரி வெயில் குறைந்த பின்னர் ஒரு சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையே பதிவாகி வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாகவும் கடலோர மாவட்டங்கள், வட, உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போல், தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மதுரை தெற்கில் 102.20 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 101.48, திருச்சி, கரூர் மாவட்டம் கே.பரமத்தியில் 101.30, தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் 100.40 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.