சென்னை: திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுககரசர், திருச்சியில் இருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. பிரதமர் மோடி, மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனநாயக விரோத செயல்களில் மிக தீவிரமாக ஈடுபடுகிறார். கர்நாடகா, கோவா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதேபோல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மோடி 2வது முறை ஆட்சிக்கு வந்ததால், தன்னை ஆயுட்கால பிரதமராக நினைத்து கொண்டிருக்கிறார். இந்தியாவில் இவர் மட்டும் 2வது முறையாக பிரதமராக வரவில்லை. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி செய்துள்ளனர். நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். எனவே மோடி, தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.