சின்னசேலம்: வீட்டு செலவுக்கு பணம் தராமல், தினமும் அடித்து துன்புறுத்தியதால் என்எல்சி ஊழியரை அவரது மனைவியே கூலிப்படை ஏவி கொன்றார்.விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி மான்குட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணி அளவில் காரின் முன்பக்க டயர் மட்டும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது அதில் வந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பியோடியது. தகவல் அறிந்ததும் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் கீழ்குப்பம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் கார் டயரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் காரை சோதனையிட்டபோது டிக்கியில் சாக்குமூட்டையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அவரது உடலில் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. மேலும் காரில் இருந்த அடையாள அட்டை மூலம் சடலமாக கிடந்தவர் நெய்வேலி என்எல்சியில் ஆபரேட்டராக பணியாற்றி வந்த பழனிவேல்(52) என்பதும், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ஐ சேர்ந்தவர் என்பதும், காரில் இருந்த டிரைவிங் லைசன்ஸ் மூலம் அந்த கார் பழனிவேலுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் அடையாள அட்டையில் இருந்த போன் நம்பரை வைத்து விசாரித்தபோது பழனிவேலின் மனைவி மஞ்சுளா (46) என்பதும், இரண்டு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மஞ்சுளா வீட்டுக்கு சென்றனர். ஆனால் மஞ்சுளா இல்லை. வீட்டை பூட்டு விட்டு வெளியூர் செல்ல நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.