சென்னை: நீட் மசோதா நிராகரிப்பை மறைத்த எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கூண்டில் நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கு ஒன்றில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது அந்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதற்கு வைகோ மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி கருணாநிதி சாட்சி விசாரணைக்காக வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசியதாவது:பல்கலைகழகங்களில் உள்ள கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது என்று கல்லூரி முதல்வர்கள் ஆணை பிறப்பித்திருக்க கூடிய நிலையில், குரு பூர்ணிமாவை பார்ப்பதற்கு அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு அனுப்பியுள்ளார்.2022-ல் சந்திரனுக்கு மனிதனை இறக்கப் போகிறோம் என்று கூறிவரும் நிலையில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய புராணங்களை, கதைகளை வைத்துக் கொண்டு பூர்ணசந்திரா, குரு பூர்ணிமா என்று கூறி மாணவர்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முட்டாள்தனமான யோசனை.