×

இசபெல்லா மருத்துவமனை 1 கோடி சொத்து வரி பாக்கி: மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனை 1 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் மருத்துவமனை வாயிலில் நோட்டீஸ்  ஒட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 12 லட்சம் சொத்துகள் உள்ளன. இவற்றுக்கான சொத்துவரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது. அதன்படி சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து சொத்துகளுக்கும் புதிய சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் தவறு இருந்தால் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு  செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்அடிப்படையில் சென்னை மாநகராட்சி புதிய சொத்துவரியை வசூல் செய்து வருகிறது. மேலும் சொத்துவரி செலுத்தாத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் பணியிலும்  மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுவருகிறது. அதன்படி தேனாம் பேட்டை மண்டலம் மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனை பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் இருந்தது. இதன்படி அந்த மருத்துவமனை சென்னை  மாநகராட்சிக்கு 1 கோடியே 3 லட்சத்து 17 ஆயிரத்து 293 சொத்துவரி பாக்கி வைத்துள்ளது.  இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் மருத்துவமனை முன்பு நோட்டீஸ்  ஒட்டியுள்ளனர். இதற்கிடையில் இந்த சொத்துவரி நிர்ணயத்தை எதிர்த்து அந்த மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Isabella Hospital, Property ,Tax Balance,Corporation Notice
× RELATED சென்னையில் உள்ள தனியார்...