×

வாங்கிய கடனை மாமியார் கொடுக்காததால் மைத்துனர் சரமாரி குத்திக்கொலை : மாமா கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மைத்துனரை அக்கா கணவரே கத்தியால் குத்திக்கொலை செய்தார். பொழிச்சலூர், அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் முகமதுஅலீம் (37). இவர், அதே பகுதியை சேர்ந்த சித்திசாய்னுரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக முகமது அலீம் தனது மாமியார் சாயென்பு என்பவருக்கு ₹1 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை முகமது அலீம் பலமுறை கேட்டும் சாயென்பு காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது அலீம் நேற்று முன்தினம் இரவு சாயென்பு வீட்டிற்கு சென்று அவரை ஆபாசமாக திட்டிவிட்டு பம்மல் நல்லதம்பி சாலை ஆட்டோ நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த அவரது மனைவியின் தம்பியும், சாயென்புவின் மகனுமான ஒசாமா காதர் (19) என்பவர், ‘‘எப்படி எனது அம்மாவை ஆபாசமாக திட்டலாம்?’’ என்று கூறி, முகமது அலீமிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இதில் ஆத்திரம் அடைந்த ஒசாமா காதர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகமதுஅலீமை குத்தினார். கத்திக்குத்து வாங்கிய முகமது அலீம் சுதாரித்து கொண்டு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஒசாமாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ஒசாமா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மேலும்   கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த முகமது அலீமை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒசாமா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து முகமது அலீமை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அக்கா கணவரே மைத்துனரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Uncle's,brother-in-law , death, father-in-law, arrested
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...