×

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

பேரையூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், கலெக்டர்கள் ராஜசேகர் (மதுரை), சிவஞானம் (விருதுநகர்) தலைமையில் நேற்று நடந்தது. இதில் எஸ்பிக்கள் மணிவண்ணன் (மதுரை), ராஜராஜன் (விருதுநகர்) மற்றும் வனத்துறை அதிகாரிகள்பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: சதுரகிரி மலைக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஜூலை 27ம் தேதி முதல் ஆக. 1ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறலாம். அதற்கு மேல் அனுமதியில்லை. மலையேறும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதிகள், மலை உச்சியில் அன்னதானக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையேற நுழைவுச்சீட்டு (கட்டணம் ரூ.5) தாணிப்பாறை அடிவாரத்தில் வழங்கப்படும். பக்தர்கள் தீப்பெட்டி மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : Adi new moon, Chaturagiri hill
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...