வேலூர்: மகள் திருமணத்துக்காக ஒரு மாத பரோலில் நாளை அல்லது நாளை மறுநாளில் வெளியே வரும் நளினி வேலூர் சத்துவாச்சாரியில் அரசியல் பிரமுகர் வீட்டில் தங்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மகள் திருமண ஏற்பாடுகளுக்கு 6 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நளினிக்கு ஒரு மாத பரோல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி நளினி பரோல் தொடர்பாக அவரது தாய் பத்மா, காட்பாடியில் உள்ள குடும்ப நண்பர் ஆகிய 2 பேர் உறுதிமொழி ஆவணங்களையும், தங்கும் இடம் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி, சிறை நிர்வாகத்திடமும் சமர்ப்பித்தனர்.