கோவை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு லேப்டாப் ஆன்லைன் மூலம் ஒரு வருட வாரண்டியுடன் ரூ.10,800க்கு விற்பனைக்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 15 லட்சத்து 36 ஆயிரம் லேப்டாப் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 13ம் தேதி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த லேப்டாப்கள், உடனடியாக ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. கோவை கொடிசியாவை சேர்ந்தவர் அரசு இலவசமாக வழங்கிய லேப்டாப்பை விற்பனைக்கு என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.