×

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சித்தப்பாவுக்கு 3 ஆயுள்: கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சித்தப்பாவுக்கு நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கேரளாவின் ஏரூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (25). இதே பகுதியில் அவரது மனைவியின் அக்காள் லிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்துடன் வசித்து வருகிறார். லிசாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். ராஜேஷ் அடிக்கடி லிசா வீட்டிற்கு சென்று வந்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி ராஜேஷ், லிசா வீட்டிற்கு சென்றார். அப்போது சிறுமியை அவரது பாட்டி அந்த பகுதியில் உள்ள டியூசனுக்கு அழைத்து செல்ல தயாராகி கொண்டிருந்தார். இதை அறிந்த ராஜேஷ், தான் அழைத்து செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பாட்டி டியூசனுக்கு சென்று விசாரித்தார். பேத்தி வரவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. மறுநாள் காலை சிறுமி வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பிணமாக கிடந்தார். கொல்லம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
டாக்டர்களின் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை அறிந்த ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது கொல்லம் முதல்வகுப்பு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். ராஜேசுக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் 26 வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கினார். பின்னர் 3.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றவாளி இளம் வயதினர் என்பதால் தூக்கு தண்டனை வழங்கவில்லை என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Little girl, rape, murder, Siddappa, 3 life, Kerala court
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...