அமெரிக்காவில் மர்மங்கள் நிறைந்த ‘ஏரியா 51’ல் ஏலியன்களை பார்ப்போம் வாங்க! பேஸ்புக் குழுவில் திரண்ட 14 லட்சம் பேர்

வாஷிங்டன்: ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பற்றிய செய்திகள் எப்போதுமே சுவாரசியமானவை. வேற்று கிரகங்களில் வசிக்கும் ஏலியன்கள், பறக்கும் தட்டு மூலம் அவ்வப்போது பூமிக்கு வந்து செல்வார்கள் என பல தலைமுறைகளாக பேசி வருகிறார்கள். உண்மையிலேயே, ஏலியன்கள் இருக்கிறதா? அவர்களிடம் பறக்கும் தட்டு இருக்கிறதா? என்று கேட்டால், அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் ‘ஆம்’  என்கின்றனர். ‘’பூமிக்கு வந்த ஏலியனையும், அதன் பறக்கும் தட்டையும் அமெரிக்க அரசு கைப்பற்றி இருக்கிறது. அதை  வைத்து ஏரியா 51 பகுதியில் ரகசியமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஏரியாவுக்குள் யாரையும் நுழைய விடுவதில்லை. அங்கு பலப்பல மர்மங்கள் இருக்கிறது. அங்கே போனால் ஏலியனை பார்க்கலாம்’’ என்று ஆவலைத் தூண்டுகிறார்கள்.அமெரிக்காவில், ‘ஏரியா 51’ மர்மத்தை பற்றி பல ஹாலிவுட் படங்களிலும், டிவி தொடர்களிலும் கூட கூறப்பட்டிருக்கிறது. 1996ம் ஆண்டு வெளியான ‘இண்டிபென்டன்ஸ் டே’ படத்தில் கூட ஏலியனையும், அதன் பறக்கும் தட்டையும் ரகசிய இடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட மர்ம பூமியான ‘ஏரியா 51’ அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் அமைந்துள்ளது.

மலைகள் சூழ்ந்த இப்பகுதி, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். இங்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இங்கு தான் தற்போது நுழைந்து ஏலியனை பார்க்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.‘ஸ்டோர்ம் ஏரியா 51: நம் அனைவரையும் அவர்களால் தடுக்க முடியாது’ என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், ‘செப்டம்பர் 20ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ‘ஏரியா 51’ பகுதிக்கு செல்வோம். அமெரிக்க ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளை விட வேகமாக முன்னேறிச் செல்வோம்’ என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருசில நாளிலே சுமார் 14 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.  இந்த விவகாரம் அமெரிக்க சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் நம்பிக்கொண்டிருக்கும் இவ்விஷயத்தில் உண்மையை வெளிக் கொண்டுவருவதே லட்சியம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறி வருகிறார்கள்.

ஒருவேளை இந்நிகழ்ச்சி நடந்தாலும் பெரும் காமெடியில்தான் முடியும் என்கின்றனர் ஒரு தரப்பினர். ஏலியனை பார்க்கலாம் என நம்பி செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்கின்றனர். அதே சமயம், அமெரிக்க விமானப்படை இவ்விவகாரத்தை விளையாட்டாக கருதவில்லை. ‘‘ஏரியா 51 விமானப்படையின் பயிற்சி தளமாகும். அமெரிக்க ஆயுதப்படைகள் பயிற்சி செய்யும் இப்பகுதியில் நுழைய முயற்சிப்பவர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அங்க என்னதான் நடக்குது?

இரண்டாம் உலகப் போரின்போது, ராணுவத்தின் பயிற்சித் தளமாக ‘ஏரியா 51‘ இருந்துள்ளது. 1955க்குப் பின் இந்த நிலப்பரப்பை, விமான உற்பத்தி பணிக்காக அமெரிக்க அரசு பயன்படுத்தத் தொடங்கியது. இங்கு பல உளவு விமானங்கள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விதவிதமான வடிவங்களில் போர் விமானங்கள் உருவாக்கப்பட்டு, பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது. இங்கு நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. நெருங்கவும் முடியாது. அமெரிக்க அரசு இவ்விடத்தை மிக மிக ரகசியமாக பாதுகாக்கிறது.

Related Stories: