திருச்செங்கோடு: ஆடி மாதம் இன்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தேங்காய் சுட்டு வழிபடும் நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. இதன் பின்னணி குறித்து ஆன்மீக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆடி முதல் நாளிலிருந்து 18ம் தேதி வரை மகாபாரதத்தில் வரும் குருசேத்திரத்தில் பாண்ட வர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் நடந்தது. போரின் முதல் நாளில் களப்பலி கொடுக்க வேண்டியது கட்டாயம். அனைத்து லட்சணங்களும் பொருந்திய வாலிபனை பலி கொடுத்து போரை தொடங்க வேண்டும். அனைத்து லட்சணங்களும் பொருந்திய மூவர் மட்டுமே இருந்தனர். கிருஷ்ணன், அர்ச்சுணன், அரவாண் ஆகியோரே இவர்கள். கிருஷ்ணரும், அர்ச்சுணரும் போர்க்களத்தில் இருக்க வேண்டி இருந்தது. ஆகவே அர்ச்சுணனுக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்த அரவாணை பலி கொடுக்க முடிவானது. அரவாணும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் தான் இறந்தாலும் 18 நாள் போரைக் காண வேண்டும் என்கிறார். ஆகவே அவரைப் பலி கொடுத்து விட்டு தலையை மட்டும் தனியாக எடுத்து ஒரு ஈட்டியில் வைத்து உயரமான ஒரு இடத்தில் நட்டு போர் முழுவதையும் அவர் பார்க்க ஏற்பாடு செய்கின்றனர்.