குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடை: தண்டனையை மறு ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு தி ஹேக் சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

தி ஹேக்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவைத் தூக்கில் போட தி ஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம்  ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து  இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம்,விசாரித்தது. இந்நிலையில் இரு தரப்பு  வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குல்பூஷன் ஜாதவைத் தூக்கிலிட தி ஹேக் சர்வதேச  நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு விசாரணை  நடைபெற்றுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷணுக்கு உரிமை உண்டு என்றும் சர்வதேச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக பாகிஸ்தான்  ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: