மதுரையில் தரமற்ற, அழுகிய முட்டைகளை தனியார் நிறுவனம் விநியோகிப்பதாக பொதுமக்கள் புகார்
மதுரை: மதுரையில் தரமற்ற முட்டைகளை தனியார் நிறுவனம் விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. அழுகிய முட்டைகள் விநியோகம் செய்ததற்காக முட்டை நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்ட பிறகும் குடோனுக்கு வெளியே வைத்து முட்டை விற்பனை நடைபெற்று வருகின்றது. இதை தொடர்ந்து மதுரையில் பொன்னகரத்தில் செயல்படக்கூடிய பிரபல முட்டை நிறுவனமாக முருகன் முட்டை ஸ்டோர் உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து மதுரை நகரில் இருக்கக்கூடிய பல்வேறு பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு முட்டை விநியோகமானது நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் மதுரை காலவாசல் பகுதியில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 டன் அளவிலான கேக்குகள் தரமற்ற முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக விசாரித்ததில் முட்டை கலந்ததில் அந்த கேக்குகள் சுகாதாரமில்லாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து பேக்கரி உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொன்னகத்தில் இருக்கக்கூடிய முருகன் முட்டை ஸ்டோரில் அவர்கள் முட்டைகளை வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து அங்கு உடனடியாக சென்ற அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த முட்டை நிறுவனத்தில் இருந்த சுமார் 10 டன் முட்டைகளை கைப்பற்றி அவற்றை அழித்தனர். அத்தோடு அந்த முட்டையில் இருந்து ஒரு முட்டை மாதிரி எடுத்து மதுரையில் இருக்கக்கூடிய பிரபல ஆராய்வு நிறுவனத்திற்கு ஆய்வுக்காக அனுப்பினர். இதை தொடர்ந்து ஆய்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமானது பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அந்த ஆய்வு முடிவுகள் வரப்பட்டு அந்த முட்டைகள் தகுதியற்றது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிரந்தரமாக அந்த நிறுவனத்தை மூடுவதற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக்கூடிய வேளையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட அந்த அறையின் வெளியே அமர்ந்து பட்டப்பகலில் வீதியில் முட்டை விற்பனையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது. மேலும் இது அதிகாரிகளுக்கு தெரிந்து நடைபெறுகிறதா அல்லது அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி இந்த சம்பவம் நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை.