தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு 15 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் கணினி மயமாக்கப்படும். கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை 5 லட்சமாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாணவர்கள் கூட சேராத அரசுப்பள்ளிகள் உள்ளன என்பது உண்மை தான். தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர். 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. ஆனால், இந்த பள்ளிகள் மூடப்படும் என்று பரவும் செய்தி பொய்யானது. மாறாக, இந்த 45 பள்ளிகள் அதே இடத்தில் நூலகங்களாக மாற்றப்படும். ஆசிரியர்கள் நூலகங்களில் பணிபுரியும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். வரும் ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக அந்தப் பள்ளிகளை மூடும் முயற்சிகள் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: