×

வரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி...விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸில் ரிஷப் பன்ட்: பிசிசிஐ புதிய திட்டம்?

மும்பை: வரும் காலங்களில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி இடம்பெறுவார் என்றும், ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவது கடினமே என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பையை (20 ஓவர் 2007, ஒரு நாள் போட்டி 2011) பெற்று பெருமையை சேர்த்தவர். 38 வயதான தோனி டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியிலும் 20 ஓவரிலும் விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பையோடு தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு ஓய்வு பெறலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு தோனிக்கு கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்துள்ள பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது என கூறியுள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் அவர் விக்கெட் கீப்பர் சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார். விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும். இடைப்பட்ட காலங்களில் அணியின் சுமுகமான மாற்றத்துக்கு தோனி துணை நிற்பார். வரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அணிக்கு அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. மேலும், அவருக்கு அவரின் பலம் தெரியும். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அப்போது அவர் ஓய்வை அறிவிப்பார். இதில் அவசரம் காட்ட எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.


Tags : Dhoni, Playing 11, BCCI, West Indies Series, Rishabh Pant
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...