சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

ஸ்ரீ ஹரிகோட்டா: சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி சந்திராயன்-2 விண்வெளியில் ஏவப்பட இருந்தது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

சந்திராயன்-1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, முதன்முதலாக நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312  நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின்  பரப்பில் படிமங்களாக இருப்பதையும் சந்திராயன்-1 கண்டறிந்தது.

சந்திராயன்-2 விண்கலம்

இந்நிலையில், நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலம், ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் ஞாயிறு காலை 6.51 மணிக்குத் தொடங்கியது. சுமார் 44 மீட்டர் உயரம் கொண்ட 640 டன்  ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி-எம்.கே III, விண்கலத்தை செலுத்த தயாராக நிறுத்தப்பட்டது.

சந்திராயன் - 2 ஏவப்படுவது தற்காலிகமாக நிறுத்தம்

‘பாகுபலி’ என்று கூறப்படும் இந்த ராக்கெட், 3.8 டன் எடையுள்ள சந்திராயன் - 2 விண்கலத்தை சுமக்கப்போகிறது என்பதால் இந்த செல்லப் பெயரை பெற்றது. இதிலுள்ள லேன்டர் ‘விக்ரம்’ செப்டம்பர் 6ம் தேதி வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கும் என்று கூறப்பட்டது. முதல் முறையாக  நிலவின் தென்துருவம் பகுதியில் ஆய்வு நடத்தும் நோக்கத்தில் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்பட இருந்ததால், உலக நாடுகள் அனைத்துமே இந்த மிஷனை உற்று நோக்கின. இந்நிலையில்தான், கவுன்ட் டவுன் நிறைவடைய இருந்த 56  நிமிடங்கள், 24வது வினாடியில், திடீரென நிறுத்தப்பட்டு, சந்திராயன் - 2 ஏவப்படுவது தற்காலிகமாக  நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிரையோஜெனிக்கில் எரிபொருள் ஏற்றப்படும் போது, 1 மணி நேரத்துக்கு முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த கோளாறு குறித்து சில மதிப்பீடுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில், ராக்கெட்டில்  ஏற்றப்பட்ட எரிபொருளை காலி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக சிறிய கோளாறுதான்

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு மிக, மிக சிறிய கோளாறுதான் என்றும் அந்த கோளாறு ஓரிரு நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சந்திரயான்-2 விண்கலத்தை உடனே விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென்பகுதியில் சூரியஒளி இருக்கும் சமயத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை தரை இறங்க செய்யும் வகையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் வருகிற ஞாயிறு மதியம் (ஜூலை 21) அல்லது திங்கள் காலை (22ம் தேதி ) சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories: