சென்னை: கொள்ளை சம்பவமானது தற்போது அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை அயனாவரம் கான்ஸ்டபுள் ரோடில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் ஏ.டி.எம். மையத்தில் நேற்று இரவு கோபால கிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்க சென்றார். அப்போது ரகசிய குறியீட்டு எண் பதிவிடும் கிஃபார்டின் மேல் பகுதியில் சிறிய அளவில் கேமரா போன்ற அமைப்பை கண்டு சந்தேகமடைந்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அது கேமரா தான் என்பதை உறுதிப்படுத்தியதோடு ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொறுத்தப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் மாலை ஏ.டி.எம்மில் பணம் நிரப்பப்பட்டதும் அப்போது ஸ்கிம்மர் கருவி இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று மாலை வரை ஏ.டி.எம் மையத்திற்குள் வந்தவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.