கடலாடி அருகே தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி

சாயல்குடி: கடலாடி அருகே தனியார் பள்ளிக்கு சவால் விடும் வகையில், அரசு பள்ளி மாறி வருவதால், கிராமபுற மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், நரசிங்கக்கூட்டம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் நூறுநாள் வேலை உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 22 மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கிராமமக்கள் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை தடுக்கவும், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்யவும் ஆசிரியர்கள், புது, புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய கட்டிடத்திற்கு பல வண்ணங்கள் அடித்து, கார்ட்டூன் பொம்மைகள் வரைந்து பள்ளி பளிச்சிடுகிறது. மாணவர்கள் உட்கார சேர், பெஞ்ச், மின் விசிறி வசதி, வாரத்திற்கு ஒருநாள் மாணவர்களுக்கு டிராக்சூட், டி.சர்ட், அரசு வழங்கிய சீருடையுடன் பெல்ட், ஷூ, படிப்பதற்கு நூலகம், இயற்கை தின்பண்டங்கள், மாதம் ஒரு பழம் திட்டம், சிறுசேமிப்பு பழக்கம், மரம் வளர்த்தல் உள்ளிட்ட பல புதுமையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நவீன முறையில் பள்ளியை மாற்றி வருவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர். அரசு வழங்கும் திட்டங்கள் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரித்து தரமான கல்வி கொடுப்பதற்கு, கிராமமக்கள், சில தன்னார்வலர்கள் பங்களிப்போடு பள்ளியை மேம்படுத்தி வருறோம். அரசின் உத்தரவை தொடர்ந்து முற்றிலும் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளது, கிராமமக்கள் கல்வி சீர் மூலம் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர்.

மாணவர்கள் பயன்பாட்டிற்கு எவர்சில்வர் பொருட்களை பயன்படுத்துகிறோம். பாஸ்ட்புட், ஜங்க்புட், பாக்கெட் நொறுக்கு தீணிகளை தின்னும் பழக்கத்தை ஒழிப்பதற்காக, பள்ளியில் நேர்மை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. கடலை மிட்டாய், எள்ளு உருண்டை மிட்டாய் இருக்கும், அருகிலுள்ள காசு பாத்திரத்தில் காசை போட்டு மாணவர்கள் மிட்டாய்களை எடுத்து கொள்ளலாம். மாணவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வருவதற்கு நீதி போதனை கதைகள், இதிகாசங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை உள்ளடக்கிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு பழம் திட்டம் துவங்கி, பழங்களை சாப்பிட கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கொருமுறை கல்விச்சுற்றுலா செல்லப்படுகிறது. மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த மாணவர்க்கு ஒரு மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்துகிறோம். பனை ஓலை மூலம் விசிறி உள்ளிட்ட பயன்படும் பொருட்கள் தயாரிக்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. சிறு சேமிப்பு பழக்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முத்துராமலிங்கத்தேவர், காமராஜர், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் விவேகானந்தர், அப்துல்கலாம் போன்ற தலைவர்கள் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் பிறந்தநாளுக்கு பள்ளியின் சார்பில் கொண்டாடப்படுகிறது.

பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன் கூறும்போது, 2006ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன், 2016 பதவி உயர்வு பெற்று தலைமையாசிரியராக நரசிங்கக் கூட்டம் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். வகுப்பறை கட்டிடங்களுக்கு புதிய வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் மாணவர்கள் அமர சேர், எழுதுவதற்கு பெஞ்ச் வசதி, மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் கபடி, சிலம்பம், மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி உள்ளிட்ட உடல் ஆரோக்கிய விளையாட்டுகளுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு வழங்கிய சீருடையுடன் பெல்ட், அடையாள அட்டை வழங்கப்பட்டு தனியார் பள்ளிகளை விட சிறப்பாக மாற்றி வருகிறோம். இதன் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர் தவிர்த்து அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். பள்ளியின் தரத்தை மேம்படுத்தும் இத்தகைய செயல்கள் ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன என்றார்.

Related Stories: