புளியரை வழியாக கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற புகையிலை, ரேஷன் அரிசி பறிமுதல்

செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையான புளியரை வழியாக தமிழக, கேரளா பஸ்களில் காய்கறி, குட்கா புகையிலை, கஞ்சா, ரேஷன் அரிசி போன்ற தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக இரு மாநில போலீசாருக்கும் தொடர்ந்து தகவல் வந்த நிலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வந்தனர். இதனால் ஓரளவிற்கு பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்களில் பொருட்கள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து செங்கோட்டை வழியாக நெல்லையிலிருந்து கொல்லத்திற்கு செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீசார் எஸ்.ஐ. மனோஜ் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆளில்லாத ஒரு பெட்டியில் 120 கிலோ எடை கொண்ட 2,338 பாக்கெட்டுகள் கொண்ட புகையிலை பண்டல் சீட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் 623 கிலோ ரேஷன் அரிசி மூடைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. ரேஷன் அரிசி மூடைகள் செங்கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது, ரயிலில் ரேஷன்அரிசி, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பை: அம்பை அருகே முக்கூடல் சாலையில் குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் செலின் கலைச்செல்வி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சித்தார்த்தன், வள்ளிநாயகம், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை எஸ்ஐ சேக் அப்துல்காதர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ரேஷன்கடை ஆய்வுக்கு சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் 2 மூடையில் 80 கிலோ ரேஷன்அரிசியை கடத்தி வந்தவர் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் அதே பகுதியில் பூட்டிய வீட்டிற்கு வெளியே 10 மூடையில் 400 கிலோ ரேஷன்அரிசி கடத்தி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 480 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரித்து வருகிறார்.

Related Stories: