காரியாபட்டி: காரியாபட்டி அருகே, அபாய வளைவு சாலையில், முன்னெச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டி அருகே, திருச்சுழி மெயின்ரோட்டில் அபாயகரமான பல வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் குறுகிய கால இடைவெளியில் பல விபத்துக்கள் நடந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வளைவில், ‘ஆபத்தான வளைவு மெதுவாக செல்லவும்’ என சிகப்பு முகப்பு ஸ்டிக்கர் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. இந்த சாலை திருச்சுழி, மானாமதுரை, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், பசும்பொன் வரை செல்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.