வால்பாறை: வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், சோலையார் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வால்பாறை பகுதியில் பெய்யும் மழையால் பி.ஏ.பி பாசன திட்ட அணைகள் நிறைந்து ஆண்டு முழுவதும் 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன நீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பாசன திட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததுள்ளது. நீர் பிடிப்பு பகுதியான சின்னக்கல்லார் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 2 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் சோலையார் அணையில் 8 மி.மீ, வால்பாறையில் 2 மி.மீ., கீழ் நீரார் அணையில் 1 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.