வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பவுர்ணமி வழிபாட்டையொட்டி, நேற்று இரவு சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பக்தர்கள் வருகை இல்லை என தெரிவித்தனர். வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனடிப்படையில், பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 14ம் தேதி முதல் இன்று (ஜூலை 17) வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பவுர்ணமி மற்றும் இன்று ஆடி மாதப் பிறப்பையொட்டி, நேற்று காலை கோயிலுக்குச் செல்ல தாணிப்பாறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். 6 மணியளவில் வனத்துறை கேட் திறக்கப்பட்டு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றனர்.