மாசடைந்த பகுதிகளில் மேலும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூட வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: மாசடைந்த பகுதிகளில் மேலும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 88 முக்கிய தொழிற்பேட்டைகளில் 2009-10ம் ஆண்டில் ஆய்வு செய்தது. நிலத்தடிநீர், காற்று, அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியவைகளின் அடிப்படையில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என ஒவ்வொரு பகுதியும் வகைப்படுத்தப்பட்டு, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளை ஆபத்தான மாசடைந்த பகுதி, தீவிரமான மாசடைந்த பகுதி, இதர மாசடைந்த பகுதி என 3 வகைகளாக பிரிக்கப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியான நிலையில், இந்த பிரச்சினை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் விசாரணை நடத்தினார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய மாசுவை மறுசீரமைக்கவும், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான மதிப்பு ஆகியவற்றை அந்தந்த தொழிற்சாலைகளில் இருந்து இழப்பீடாக வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதோடு இதுபோன்ற தொழிற்சாலைகளை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபத்தான மாசடைந்த பகுதி மற்றும் தீவிரமான மாசடைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதாவது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற பிரிவுகளான இந்த தொழிற்பகுதிகளில் மேற்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்கவோ, தொழிற்சாலைகளை விரிவுபடுத்தவோ அனுமதிக்கக்கூடாது. அந்த பகுதி குறிப்பிட்ட அளவு மாசு குறையும் வரை அல்லது அந்த பகுதி தாங்கும் அளவுக்கு மேம்படுத்தப்படும் வரை இந்த அனுமதிகள் கூடாது. வெள்ளை மற்றும் பச்சை நிற அல்லது மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் இந்த உத்தரவால் பாதிக்கப்படாது. பொருளாதார வளர்ச்சி என்பது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாக இருக்கக்கூடாது. நிபுணர்களுடன் சேர்ந்து இந்த உத்தரவை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றிய பின்னர் அதுதொடர்பான தகவலை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: