சென்னை : 18 ஆண்டுகளுக்கு பின்பு கல்லூரி கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக கல்லூரிகள் மற்றும் 13 உறுப்பு கல்லூரிகளுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு கல்வி பருவக்கட்டணம் ரூ. 9000ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,பேராசிரியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்குதல் ஆகிய தேவைகளுக்காக கல்வி கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக்கழகம் கோரியிருந்தது.
கட்டண உயர்வுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை ,அண்ணா பல்கலைக்கழகம் முன் வைத்திருந்த கட்டண உயர்வை சற்று குறைந்து ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை படிப்புக்கான கட்டணம் ரூ. 9000ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.இ., எம். டெக். படிப்புகளுக்கான கட்டணம் ரூ. 9000ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கட்டணம் ரூ. 9000ல் இருந்து ரூ.17,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து இந்த புதிய கட்டணம் முறை இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.