மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

மகாராஷ்டிரா: மும்பை டோங்கிரியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. தென் மும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள தண்டல் வீதியில் ‘கெசர்பாய்’ என்ற நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இது மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியமான மஹாடாவுக்கு சொந்தமானது. இந்த கட்டிடத்தில் 10 முதல் 12 குடும்பங்கள் வசித்து வந்தன. சமீப நாட்களாக மும்பையில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று காலை 11.40 மணியளவில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார்.

தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மனிதச் சங்கிலி அமைத்து இடிபாடுகளை அகற்றுவதில் உதவி செய்தனர். இடிந்து விழுந்த கட்டிடம் குறுகிய சந்தில் இருந்ததால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ்கள் உள்ளே செல்ல முடியாததால் 50 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவாலான இந்த மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் இருந்து 11 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: