புதுடெல்லி: பரத நாட்டிய கலைஞர் கே.கல்யாண சுந்தரம் பிள்ளை உட்பட 4 பேர், `அகாடமி ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சங்கீத நாடக அகாடமி அமைப்பு, இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அமைப்பாகும். இதன் பொதுக்குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்றது. இதில், பரத நாட்டிய கலைஞர் கே. கல்யாண சுந்தரம் பிள்ளை, தபேலா கலைஞர் ஜாகீர் உசேன், நடனக் கலைஞர் சோனல் மான்சிங் மற்றும் நடன பயிற்சியாளர் ஜதின் கோஸ்வாமி ஆகியோர் ‘அகாடமி ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர இசை, நடனம், நாடகம், பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசை, பழங்குடி இசை, பொம்மலாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் ஒட்டுமொத்த பங்களிப்புக்கான 2018-ம் ஆண்டு `அகாடமி புரஸ்கார் விருதுக்காக 44 கலைஞர்களும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.