×

மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் அனைத்து போட்டி தேர்வுகளும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறக்கணித்து விட்டு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அஞ்சல்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தொலை தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில மொழி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை உணர்ந்து எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.  தபால் தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் தான் தேர்வு எழுத முடியும் என்றும் அறிவித்தது மிகப்பெரிய அநீதி ஆகும். மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் இதுகுறித்து பிரச்னை எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்தே  தொலை தொடர்புத்துறை அதன் தவறுகளை உணர்ந்து கொண்டு அஞ்சல் துறை போட்டி தேர்வுகளை ரத்து செய்திருக்கிறது.

அந்த வகையில் இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மாநிலங்களவையில் இச்சிக்கல் எழுப்பப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்று, இச்சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கூறிய அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பணி பாராட்டத்தக்கது. இந்தியா என்பது ஒற்றை நாடு அல்ல. அது பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு கலாசாரங்களைக் கடைபிடிக்கும் மக்களைக் கொண்ட பல்வேறு நிலப்பகுதிகளின் ஒன்றியம் ஆகும். இதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட்டால் தான் அமைதியும், ஒற்றுமையும் பெருகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அஞ்சல்துறை தேர்வுகளில் நடந்த குழப்பங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனி நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகளையும் தமிழில் நடத்த அரசு முன்வர வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Central Government, Tamil, Ramadas
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...