தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி: தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று உறுதியளித்துள்ளது.

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களை கூறி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இதுகுறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் விளக்க மனு மட்டுமே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,”தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் கிடையாது. தொகுதி மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி ஆகியவை இன்னும் முடிவடையவில்லை. அதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதிவரை நடத்த முடியாது என அதில் குறிப்பிடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகனா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் போது மாநிலம் முழுவதும் 50சதவீத இடஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக எடுத்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.  தலைமை நீதிபதி உத்தரவில்,”மேற்கண்ட விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான பிரதான வழக்கு நாளை(இன்று) விசாரணைக்கு வருகிறது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.

Related Stories: