நண்பருடன் பைக்கில் வந்த போது விபரீதம் வேகமாக வந்த மாநகர பஸ் மோதி 2 பெண் இன்ஜினியர்கள் பரிதாப பலி

சென்னை: நந்தனம் அருகே பைக் மீது மாநகர பஸ் மோதிய விபத்தில் 2 பெண் இன்ஜினியர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ைபக் ஓட்டிய வாலிபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை நந்தனம் அண்ணாசாலையில் கிழக்கு தாம்பரத்தில் இருந்து ஏ51 மாநகர பஸ் ஒன்று பிராட்வே நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது வேளச்சேரியில் இருந்து எழும்பூர் நோக்கி பைக்கில் இரண்டு பெண்களை ஏற்றி கொண்டு வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். காலை நேரம் என்பதால் அண்ணாசாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று கொண்டிருந்தன.நந்தனம் மசூதி அருகே செல்லும் போது ஆட்டோ ஒன்று சர்வீஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வந்தது. இதை கவனித்த பைக்கில் சென்ற ஒருவர் தனது வேகத்தை குறைத்தார். அப்போது அருகில் இரண்டு பெண்களுடன் வந்த வாலிபரின் பைக் மற்றொரு பைக் மீது மோதி நிலை தடுமாறியது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிராட்வே நோக்கி வேகமாக வந்த மாநகர பஸ் மூன்று பேர் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் சென்ற மூன்று பேரும் நடுரோட்டில் கீழே விழுந்தனர். அப்போது, 2 பெண்களின் மீது மாநகர பஸ் ஏறி இறங்கியது.

இதில், பெண் இன்ஜினியர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பைக் ஓட்டி வந்த வாலிபர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.உடனே பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த 2 பெண்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது,  பைக் ஓட்டி வந்த வாலிபர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த சிவா(23) என்றும், இவருடன் வந்த பெண் இன்ஜினியர்கள் ராஜமுந்திரியை சேர்ந்த பவாணி(22) மற்றும் லட்சுமி(21) என தெரியவந்தது. இவர்கள் சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கடந்த 4 மாதங்களாக எழும்பூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த சிவாவும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மூன்று பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் நேற்று காலை ஒரே பைக்கில் வேளச்சேரியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒரே பைக்கில் மூன்று பேர் பயணம் செய்ததால் பைக் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நடந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவா ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய மாநகர பஸ் ஓட்டுனர் குணசேகரன்(41) என்பவரை போலீசார் கைது  செய்தனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், சாலையோரம் வேன் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததே விபத்துக்கு முக்கிய காரணம். இரண்டு வாகனம் நிறுத்தப்படாமல் இருந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்று குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நந்தனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: