மதுரை: கரூர் எஸ்பி மாற்றத்தை திரும்ப பெறக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, காவல்துறை சீர்திருத்த விதி பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து டிஜிபி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், வெங்கமேட்டைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கரூர் மாவட்ட எஸ்பியாக இருந்த விக்ரமன், திடீரென சென்னை கணினி பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றம் கரூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த மே 11ம் தேதிதான் அவர், கரூர் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார். அன்று முதல் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய விக்ரமனை மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு சர்ச்சைகளுக்கு பெயர் போன பாண்டியராஜனை எஸ்பியாக நியமித்துள்ளனர். இவர் மீது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தாக்கியதுடன், மரியாதை குறைவாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல குற்றசாட்டுகள் உள்ளன. இவரை நியமித்ததற்கு கண்டனம் தெரிவித்து கரூர் மாவட்ட மக்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.