திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பூதமலை பகுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலையை நேற்று பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கோரிபள்ளம் கிராமம் அருகே ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதியான பூதமலை வனப்பகுதி உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் இருந்து சில சமூக விரோத கும்பல் ஏறிச் சென்று அங்குள்ள மரங்களை வெட்டி சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சாராயம் காய்ச்சும் தொழில் அதிகரித்து தற்போது அந்த மலைப் பகுதி முழுவதும் 50க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய ஆலைகள் நடைபெற்று வருகிறது.இந்த பகுதியில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ராட்சதக் குழிகள் தோண்டி பிளாஸ்டிக் கவர் போட்டு சாராய ஊறல்களையும் நிரப்பி அடுப்பு வைத்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். இதற்காக அங்குள்ள மூலிகை மரங்களையும் பெரிய பெரிய காட்டு மரங்களையும் வெட்டி விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளச்சாராயத்தை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, கந்திலி ஜோலார்பேட்டை, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.