×

நாட்றம்பள்ளி அருகே பூதமலை பகுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே பூதமலை பகுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலையை நேற்று பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கோரிபள்ளம் கிராமம் அருகே ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதியான பூதமலை  வனப்பகுதி உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் இருந்து சில சமூக விரோத கும்பல் ஏறிச் சென்று அங்குள்ள மரங்களை வெட்டி சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த சாராயம் காய்ச்சும் தொழில் அதிகரித்து தற்போது அந்த மலைப் பகுதி முழுவதும் 50க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய ஆலைகள் நடைபெற்று வருகிறது.இந்த பகுதியில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ராட்சதக் குழிகள் தோண்டி பிளாஸ்டிக் கவர் போட்டு சாராய ஊறல்களையும் நிரப்பி அடுப்பு வைத்து  நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். இதற்காக அங்குள்ள மூலிகை மரங்களையும் பெரிய பெரிய காட்டு மரங்களையும் வெட்டி விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த கள்ளச்சாராயத்தை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, கந்திலி ஜோலார்பேட்டை, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

மேலும் கோரிப்பாளையம் பகுதியில் சாரயம் காய்ச்சும் கும்பல் மற்றும் சமூக விரோதிகள் என அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரிகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடமாட்டம்  அதிகரித்ததால், இதனை தடுக்கும்படி போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நேற்று மலைப்பகுதிக்கு சென்று அங்குள்ள சாராய ஊறல்கள், அடுப்புகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். பயந்துபோன சாராய விற்பனை கும்பல் மலைப்பகுதிக்குள் தப்பிச் சென்று மாயமானார்கள். பின்னர் பொதுமக்கள் அங்கு காய்ச்சி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் கீழே ஊற்றி அழித்தனர். சாராயம் காய்ச்சுவதை தட்டிக் கேட்ட பொதுமக்கள் அங்கிருந்த அடுப்புகளையும், சாராய ஊரல்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் நாட்றம்பள்ளி  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Civilians,hitting,counterfeit,factory ,Poothamalai
× RELATED நாகையில் பொதுமக்கள் தாக்கியதில் வீடு...