கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கிய ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தன. 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த 15ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கருப்பூரில் உள்ள சின்னம்மாள் கல்லறை மற்றும் கும்பகோணத்தில் உள்ள பெருமாண்டி இடுகாட்டில் உள்ள சமாதியில் இறந்த குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை வைத்து பெற்றோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் தீவிபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளி முன் ஒன்று கூடி 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டுக்கு மாலை அணிவித்தனர்.