மதுரை: தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்தை நாடுவோருக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், காலதாமதமாக செய்யும் மனுக்களை நீதிமன்றங்கள் ஊக்குவிக்க கூடாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், மகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். பதவி உயர்வுக்காக கடந்த 1992-93ம் ஆண்டின் பணி மூப்பு அடிப்படையில் சார்பதிவாளர் நிலை 2ல் எனக்கு பதவி உயர்வும், அதற்குரிய பணப்பலன்களை நிர்ணயம் செய்து வழங்கவும் பதிவுத்துறை ஐஜிக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:காலம் கடந்து மனு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடுப்பவர்கள் அதற்கான காரணம் உருவான காலத்தில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் நீதிமன்றத்தை நாட வேண்டும். காலதாமதமான மனுக்களை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக்கூடாது. தற்போது பலர் குறுக்கு வழியில் பலன் பெறும் வகையில், காரண காரியங்களை தாமாகவே உருவாக்கி நீதிமன்றத்திற்கு வருகின்றனர். நிலுவையிலுள்ள இதுபோன்ற மனுக்களை அடையாளம் கண்டு, அவற்றை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.