சென்னை: தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க்கிற்கு கஞ்சா போதையில் வந்த ரவுடி கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் 8 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதை தொடர்ந்து தாம்பரம் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் பெட்ரோல் பங்க்கில் நடந்த தாக்குதல் தொடர்பாக 8 பேர் தற்போது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து சாருஹாசன், கார்த்திகேயன், சந்தோஷ்குமார், அவிலாஷ், அஜித், வெங்கட், தனசேகர், ஜெயராமன் ஆகிய 8 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் அடுத்துள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட இவர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு வேலை பார்க்கக்கூடிய இளவரசன் என்ற ஊழியர் பெட்ரோல் போடாமல் செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் மேலும் சிலரை அழைத்து வந்து ஆயுதங்களோடு அங்கு இருக்க கூடிய ஊழியர்களை தாக்கியும், இளவரசன் என்ற அந்த ஊழியரை தேடி பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜீவ்காந்தி என்பவரை தாக்கியும் உள்ளனர்.