புதுடெல்லி: நாட்டில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக எம்பி மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் எழுத்து மூலமாக அளித்த பதில்: நாட்டில் 2 இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என 2018-2019 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரு தொழில் வழித்தடம், உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொழில் வழித்தடமும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள தொழில் வழித்தடத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 5 இடங்களில் சேலமும் ஒன்றாகும். சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் மற்றும் திருச்சி ஆகியவறை இந்த தொழில் வழித்தடத்துக்கு அடையாளம் காணப்பட்டுள்ள பிற இடங்கள் ஆகும்.